கர்நாடகத்தில் கொரோனாவால் இறந்த அனைவரின் குடும்பத்திற்கும் நிவாரணம் - டி.கே.சிவக்குமார் வலியுறுத்தல்

கர்நாடகத்தில் கொரோனாவால் இறந்த அனைவரின் குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறினார்.

Update: 2021-07-02 20:55 GMT
பெங்களூரு:
 
  கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நிவாரணம் வழங்க வேண்டும்

  கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இதுவரை 3.30 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர். இதற்கு என்னிடம் ஆதாரங்கள் உள்ளன. நான் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தேன். சாம்ராஜ்நகரில் மட்டுமே ஆக்சிஜன் கிடைக்காமல் 65 பேர் இறந்தனர். அரசு 36 பேர் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் இறந்ததாக கூறியது. அவர்களின் குடும்பங்களுக்கு இன்னும் இறப்பு சான்றிதழை கூட இந்த அரசு வழங்கவில்லை.

  கொரோனாவால் இறந்தவர்களின் பி.பி.எல். குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கையை சரியாக தெரிந்துள்ள மொத்த இறப்புகளை ஆய்வு செய்ய வேண்டும். கொரோனாவால் இறந்த அனைவரின் குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.

யாரை ஆதரிப்பார்கள்

  காங்கிரஸ் தாய்-தந்தை இல்லாத கட்சி என்று மந்திரி ஈசுவரப்பா கூறியுள்ளார். தேர்தல் வந்தால் மக்கள் யாரை ஆதரிப்பார்கள் என்பது அவருக்கு தெரியும். ராஜினாமா செய்த 17 எம்.எல்.ஏ.க்களும் தனது உயிரை காப்பாற்றியதாக குமாரசாமி கூறியுள்ளார். அவரது கருத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.
  இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

மேலும் செய்திகள்