நாமக்கல் அருகே கூலித்தொழிலாளி வெட்டிக்கொலை மகனிடம் போலீசார் விசாரணை

நாமக்கல் அருகே கூலித்தொழிலாளி வெட்டிக்கொலை மகனிடம் போலீசார் விசாரணை

Update: 2021-07-03 18:43 GMT
நாமக்கல்:
நாமக்கல் அருகே கூலித்தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது மகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூலித்தொழிலாளி படுகொலை
நாமக்கல் அருகே உள்ள வீசாணம் அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் வையாபுரி (வயது 60). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி நல்லம்மாள் (55). இவர்களுக்கு வெங்கடேஷ் (40) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டது. இருப்பினும் மனைவியை பிரிந்து வெங்கடேஷ், பெற்றோருடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று வையாபுரி வீட்டின் பின்புறம் உள்ள கீற்று கொட்டாயினுள் கட்டிலில் கழுத்து பகுதியில் வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து அப்பகுதி பொதுமக்கள் நாமக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் மோப்ப நாய் சீமா வரவழைக்கப்பட்டு, துப்பு துலக்கப்பட்டது. சிறிது தூரம் ஓடி சென்ற நாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இருப்பினும் வீட்டையே சுற்றி வந்தது. இதற்கிடையே அங்கிருந்து ரத்தக்கறை தோய்ந்த அரிவாள் ஒன்றை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் வையாபுரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மகனிடம் விசாரணை
இந்த கொலை தொடர்பாக அவரது மகன் வெங்கடேஷ் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்து உள்ளது. எனவே அவரிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். வெளிநபர்கள் யாரேனும் அங்கு வந்து சென்றார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
=========

மேலும் செய்திகள்