2 வயது குழந்தையை கடித்து குதறி கொன்ற தெருநாய்கள்

தார்வாரில் குடிசையில் படுத்திருந்த 2 வயது குழந்தையை தெருநாய்கள் கடித்து குதறி கொன்ற பயங்கர சம்பவம் நடந்துள்ளது.

Update: 2021-07-09 21:16 GMT
உப்பள்ளி: தார்வாரில் குடிசையில் படுத்திருந்த 2 வயது குழந்தையை தெருநாய்கள் கடித்து குதறி கொன்ற பயங்கர சம்பவம் நடந்துள்ளது. 

விவசாய கூலி தொழிலாளர்கள்

தார்வாா் அருகே நவலூர் ரெயில் நிலையம் அருகே நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த நிலையில், அந்த விவசாய நிலங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான தொழிலாளர்கள் தங்கியிருந்து விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். விவசாய கூலி வேலையில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள், நவலூர் ரெயில் நிலையம் அருகே குடிசை அமைத்து தங்கி உள்ளனர். 

அந்த விவசாய நிலத்தில் ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசுகூர் பகுதியை சேர்ந்த கோபால்-சின்னம்மா தம்பதி தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார்கள். அவர்களுக்கு 2 வயதில் மகன் இருந்தான். அவர்கள் உள்பட அந்த குடிசையில் வசித்து வருபவர்கள் வேலைக்கு செல்லும் சமயத்தில், தங்கள் குழந்தைகளை குடிசையில் விட்டு செல்வது வழக்கம். 

தெருநாய்கள் கடித்து கொன்றன

அதேபோல, நேற்று முன்தினமும் கோபால்-சின்னம்மா தம்பதி தங்கள் 2 வயது மகனை குடிசையில் படுக்க வைத்துவிட்டு வேலைக்கு சென்றனர். அங்கு வசித்து வந்த மற்ற தொழிலாளர்களும் குழந்தைகளை குடிசையில் விட்டு சென்றனர். அந்தப்பகுதியில் தெருநாய்கள் அட்டகாசம் அதிகமாக உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் 8 தெருநாய்கள் நவலூர் ரெயில் நிலையம் அருகே அமைக்கப்பட்ட குடிசை பகுதியில் சுற்றித்திரிந்துள்ளன. 

அந்த சமயத்தில், கோபால்-சின்னம்மா வசித்து வந்த குடிசை திறந்து கிடந்ததாக தெரிகிறது. இதனால் அந்த தெருநாய்கள் அவர்களின் குடிசைக்குள் புகுந்தன. அவை, குடிசைக்குள் படுத்திருந்த 2 வயது ஆண் குழந்தையை கடித்து குதறி உள்ளன. இதில், அந்த குழந்தை பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. 

கதறி அழுதனர்

இதனை பார்த்து அங்கிருந்தவர்கள் விவசாய நிலத்தில் வேலை பார்த்த குழந்தையின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் குழந்தையின் பெற்றோர் மற்றும் உடன் வேலை பார்த்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு குடிசையை நோக்கி ஓடி வந்தனர். அப்போது குழந்தையை நாய்கள் கடித்து குதறுவதை பார்த்து கோபால்-சின்னம்மா தம்பதியும், அங்கிருந்தவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் தெருநாய்களை அங்கிருந்து விரட்டியடித்தனர். 

ஆனாலும் அதற்குள் 2 வயது குழந்தை உயிரிழந்திருந்தது. குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இது பார்ப்போரின் கல்நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது. 

சோகம்

இதுபற்றிய தகவல் அறிந்ததும் தார்வார் வித்யாகிரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

குடிசையில் படுத்திருந்த 2 வயது குழந்தையை தெருநாய்கள் கடித்து குதறி கொன்ற சம்பவம் அந்தப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்