ஊத்தங்கரையில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து ரூ.50 லட்சம், 21½ பவுன் நகைகள் திருட்டு

ஊத்தங்கரையில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து ரூ.50 லட்சம் மற்றும் 21½ பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

Update: 2021-07-10 16:34 GMT
கல்லாவி:
ஊத்தங்கரையில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து ரூ.50 லட்சம் மற்றும் 21½ பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். 
கட்டிட ஒப்பந்ததாரர் 
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காமராஜ் நகரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 40). இவரது சொந்த ஊர் பாவக்கல் ஆகும். இவர் பெங்களூருவில் கட்டிட ஒப்பந்ததாரராக இருந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவக்குமாரின் மாமனார் இறந்தார். அதற்காக சிவக்குமார் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கோவைக்கு சென்றார்.
சிவக்குமாரின் வீடு அருகில் வசந்தகுமார் (37) என்ற லாரி டிரைவர் வசித்து வருகிறார். அவரும், வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றிருந்தார். இந்த நிலையில் நேற்று ஒப்பந்ததாரர் சிவக்குமார் மற்றும் லாரி டிரைவர் வசந்தகுமார் ஆகியோரின் வீடுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கதவுகள் திறந்த நிலையில்  இருந்தன.
ரூ.50 லட்சம், நகைகள் திருட்டு 
இதை சிவக்குமாரின் தம்பி செந்தில்குமார் பார்த்து ஊத்தங்கரை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். மேலும் சிவக்குமார், வசந்தகுமார் ஆகியோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ஊத்தங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். இதில் சிவக்குமார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் அங்கிருந்த ரூ.50 லட்சம், 20 பவுன் தங்க நகைகள் திருட்டு போயிருந்தன. மேலும் வசந்தகுமார் வீட்டில் ரூ.37 ஆயிரமும், 1½ பவுன் தங்க நகை, 250 கிராம் வெள்ளி நகைகள் திருட்டு போனது தெரியவந்தது.
சிவக்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாவக்கல் கிராமத்தில் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தை விற்று அதில் வந்த பணம் 50 லட்சம் ரூபாயை வீட்டில் வைத்திருந்தார். அந்த பணமும், நகைகளும் திருட்டு போனது விசாரணையில் தெரிய வந்துள்ளது. 2 வீடுகள் பூட்டி இருந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்த திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.
போலீஸ் சூப்பிரண்டு விசாரணை 
அடுத்தடுத்து 2 வீடுகளின் பூட்டுகளை உடைத்து நகை, பணம் திருட்டு போனது குறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி நேரில் சென்று விசாரணை நடத்தினார். அதேபோல கைரேகை நிபுணர்களும் திருட்டு நடந்த வீடுகளுக்கு சென்று ஆய்வு செய்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.
இந்த திருட்டு சம்பவம் குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்