மாணவர்களின் கல்விக்காக தனி வானொலி தொடங்கலாம் தமிழக அரசு பரிசீலிக்க கமல்ஹாசன் வேண்டுகோள்

கல்வி தொலைக்காட்சி போல மாணவர்களின் கல்விக்காக தனி வானொலி தொடங்கலாம் தமிழக அரசு பரிசீலிக்க கமல்ஹாசன் வேண்டுகோள்.

Update: 2021-07-14 14:12 GMT
சென்னை,

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடலூர் மாவட்டம், புவனகிரிக்கு அருகேயுள்ள கத்தாழை ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர் கார்த்திக்ராஜா, தனது மாணவர்களுக்காக ஒரு இணைய ரேடியோவை உருவாக்கியுள்ளார். 2-ஜி இணைய வசதி மட்டுமே கொண்டிருக்கும் கிராமப்புற ஏழை மாணவர்களை மனதில் வைத்து இந்த முயற்சியை முன்னெடுத்திருக்கிறார்.

தமிழகம் முழுக்க தன்னார்வம் கொண்ட சுமார் 75 ஆசிரியர்கள் ஒன்றிணைந்து இதைச் செம்மையாக நடத்தி வருகிறார்கள். ஆயிரக்கணக்கான மாணவர்கள் இதனால் பயன்பெற்று வருகின்றனர். பெரிய முதலீடு, தொழில்நுட்பம் தேவையின்றி தங்கள் மாணவர்கள் மீதான அன்பினாலேயே இதைச் சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள். ஒரு மாணவருக்கு வகுப்பிற்கென நாள் ஒன்றிற்கு அதிகபட்சம் 300 எம்.பி. டேட்டாதான் இதற்கு தேவைப்படுகிறது. ஆசிரியர் கார்த்திக் ராஜாவும், அவரது சக ஆசிரியர்களும் பாராட்டுக்குரியவர்கள்.

தனி முழுநேர வானொலி உருவாக்கப்படுமானால், ஏழை-எளிய மாணவர்களுக்கு மிகப்பெரிய வசதியாக இருக்கும். கல்வி தொலைக்காட்சி போல தமிழக அரசு கல்விக்கென தனி வானொலி அல்லது பண்பலை வரிசை தொடங்கலாம். தமிழக அரசு இதைப் பரிசீலிக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்