வீட்டிற்கு நடந்து சென்ற மூதாட்டியிடம் 2 பவுன் சங்கிலி பறிப்பு

பெரம்பலூரில் காய்கறிகள் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு நடந்த சென்ற மூதாட்டியிடம் 2 பவுன் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் பறித்து சென்றனர்.

Update: 2021-07-16 19:10 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர்- எளம்பலூர் சாலையில் உள்ள குளோபர் நகரை சேர்ந்தவர் ரெங்கராஜ். இவரது மனைவி சகுந்தலா(வயது 65). இவர் நேற்று காலை கடைக்கு காய்கறிகள் வாங்கச்சென்றார். பின்னர் காய்கறிகளை வாங்கிக்கொண்டு மீண்டும் வீட்டிற்கு நடந்து சென்றார்.

வீட்டின் அருகே சென்றபோது, அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் மர்மநபர்கள் 2 பேர் வந்தனர். அதில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த நபர், சகுந்தலா கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை பறித்தார்.

இதையடுத்து மர்மநபர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர். மேலும் மர்மநபர் சங்கிலியை பறித்தபோது சகுந்தலாவுக்கு கழுத்தில் லேசான காயம் ஏற்பட்டது. இது தொடர்பான புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கிலியை பறித்துச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்