விழுப்புரம் அருகே ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

விழுப்புரம் அருகே அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகள் அகற்றப்பட்டன.

Update: 2021-07-19 16:58 GMT
விழுப்புரம், 

20 ஆண்டுகளாக ஆக்கிரப்பு

விழுப்புரம் அருகே கல்பட்டு கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்தால வாழியம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் இந்த கோவிலுக்கு சொந்தமான இடம் சிறுவாக்கூர் எல்லையில் 60 செண்ட் அளவில் உள்ளது.
இந்த இடத்தில் 30 சென்ட் அளவிற்கு தனி நபர்கள் 5 பேர், கடந்த 20 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்து டீக்கடை, பெட்டிக்கடை, ஓட்டல்களை நடத்தி வந்தனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்புதாரர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பலமுறை நோட்டீசு அனுப்பப்பட்டது. இருப்பினும் அவர்கள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்பை அகற்றவில்லை.

அதிரடியாக அகற்றம்

இந்நிலையில் நேற்று இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதி, ஆய்வாளர் செல்வராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் கல்பட்டு கிராமத்திற்கு விரைந்து சென்று பொக்லைன் எந்திரத்தின் மூலம் அந்த ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றினர். ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதையொட்டி ஏதும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க காணை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்