திருமணமான 2 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

திருமணமான 2 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-07-20 00:47 GMT
ஆவடி,

வேலூர் மாவட்டம் ஆற்காட்டை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 27). இவர், திருநின்றவூரில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வேலூரை சேர்ந்த நாகேஸ்வரி (21) என்பவருடன் திருமணம் நடந்தது.

திருமணத்துக்கு பிறகு நாகேஸ்வரி அவருடைய பெற்றோர் வீட்டில் தங்கி இருந்தார். மணிகண்டன் மட்டும் திருநின்றவூரில் வேலைக்கு வந்து சென்றார்.

கடந்த வெள்ளிக்கிழமை அன்றுதான் ஆவடி, நந்தவனமேட்டூர் காந்தி தெருவில் வாடகை வீடு ஒன்றில் தனது மனைவி நாகேஸ்வரியுடன் மணிகண்டன் தனிக்குடித்தனம் சென்றார்.

தூக்குப்போட்டு தற்கொலை

நேற்று முன்தினம் மணிகண்டன் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் தனியாக இருந்த நாகேஸ்வரி, திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆவடி போலீசார், நாகேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

நாகேஸ்வரிக்கு திருமணமாகி 2 மாதங்களே ஆவதால் இதுகுறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்