டியூசன் ஆசிரியை சரமாரி குத்திக் கொலை

நெல்லையில் டியூசன் ஆசிரியை சரமாரியாக குத்திக் கொலை செய்யப்பட்டார்.

Update: 2021-07-20 19:28 GMT
நெல்லை:
நெல்லையில் டியூசன் ஆசிரியை சரமாரி குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து அவரது மகள்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

டியூசன் ஆசிரியை

நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்தவர் கோயில் பிச்சை மனைவி உஷா (வயது 50). இவர் அந்த பகுதியில் உள்ள பட்டப்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு டியூஷன் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியையாக இருந்தார். 
இவருக்கு நீனா (22), ரீனா (19) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இதில் நீனா என்ஜினீயரிங்கும், ரீனா பட்டப்படிப்பும் படித்துள்ளனர். இவர்கள் 2 பேரும் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது. மேலும் கோயில் பிச்சை வெளியூரில் வசித்து வருவதால் உஷா தனது மகள்களை கவனித்து வந்தார். உஷா தனது மகள்களை வீட்டை விட்டு வெளியே எங்கும் அழைத்துச் செல்லமாட்டார். எந்த பொருட்கள் வாங்க வேண்டுமானாலும் உஷா மட்டுமே வெளியே சென்று வாங்கி வருவார். எப்போதும், அவரது வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருக்கும்.

குத்திக்கொலை

இந்த நிலையில் நேற்று காலையில் வீட்டில் உஷா அலறும் சத்தம் கேட்டது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் வீட்டு முன்பு திரண்டு கதவை திறக்க முயற்சித்தனர். ஆனால் கதவு உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. இதுகுறித்து உடனடியாக பாளையங்கோட்டை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு உஷா கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். அதாவது கம்பியால் அடித்தும், கத்தியால் சரமாரியாக குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். போலீசார் உஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மகள்களிடம் விசாரணை

உஷாவின் உடல் அருகே நீனா, ரீனா ஆகியோர் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் 2 பேரையும் போலீசார் வேனில் ஏற்றி பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். இதில் மூத்த மகளான நீனா, உஷாவை கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இருந்தாலும் 2 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தாய் இறந்தது கூட தெரியாமல் 2 இளம்பெண்களும் பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும், பொம்மையை வைத்து விளையாடிக் கொண்டிருந்ததும் பார்ப்பவர்களை கண்கலங்க வைத்தது.
இந்த சம்பவம் குறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நெல்லையில் டியூசன் ஆசிரியை சரமாரியாக குத்திக் கொைல செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்