பி.யூ.சி. 2-ம் ஆண்டு மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் வெளியீடு

கர்நாடகத்தில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் வெளியிட்டுள்ளார்.

Update: 2021-07-20 20:45 GMT
பெங்களூரு: கர்நாடகத்தில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் வெளியிட்டுள்ளார்.

மதிப்பெண் பட்டியல்

கர்நாடகத்தில் கொரோனா பரவல் காரணமாக பி.யூ.சி. 2-ம் ஆண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி செய்யப்பட்டனர். இந்த நிலையில் அந்த மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா பரவல் காரணமாக பி.யூ.சி. 2-ம் ஆண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனால் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு டிகிரி கல்லூரிகளில் சேர்க்கை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது பி.யூ.சி. 2-ம் ஆண்டு மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் வெளிடப்பட்டுள்ளது.

கற்றல் திறன்

அவர்கள் எஸ்.எஸ்.எல்.சி.யில் பெற்ற மதிப்பெண்ணில் இருந்து 45 சதவீதம், பி.யூ.சி. முதலாமாண்டில் பெற்ற மதிப்பெண்ணில் இருந்து 45 சதவீதமும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2-ம் ஆண்டில் அவர்களின் கற்றல் திறன் அடிப்படையில் 10 சதவீத மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. மொத்தம் 6 லட்சத்து 66 ஆயிரத்து 497 மாணவ-மாணவிகள் பி.யூ.சி. 2-ம் ஆண்டில் படித்தனர்.

அதில் மாணவர்கள் 3 லட்சத்து 35 ஆயிரத்து 138 பேரும், மாணவிகள் 3 லட்சத்து 31 ஆயிரத்து 359 பேரும் உள்ளனர். இதில் 4 லட்சத்து 50 ஆயிரத்து 706 பேர் முதல் இடத்தை (கிரேடு) பிடித்துள்ளனர். 1 லட்சத்து 47 ஆயிரத்து 55 பேர் 2-ம் இடத்தையும், 68 ஆயிரத்து 729 பேர் 3-ம் இடத்தையும் பிடித்துள்ளனர். மொத்தம் 2,239 பேர் 600-க்கும் 600 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

திருப்தி இல்லை

அரசு வழங்கியுள்ள இந்த மதிப்பெண்களில் திருப்தி இல்லை என்று கருதும் மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். இவர்களுக்கான தேர்வு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 19-ந் தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் 3-ந் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதில் தனி தேர்வர்களும் பங்கேற்று தேர்வு எழுத முடியும். இந்த தேர்வை எழுத வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தனி தேர்வர்கள் ஏற்கனவே விண்ணப்பித்து இருந்தால், புதிதாக விண்ணப்பிக்க தேவை இல்லை.
இவ்வாறு சுரேஷ்குமார் கூறினார்.

மேலும் செய்திகள்