திருநின்றவூரில் 2 குழந்தைகளை கொன்று பெண் தற்கொலை செய்த வழக்கில் கணவர் கைது

திருநின்றவூரில் 2 குழந்தைகளை கொன்று பெண் தற்கொலை செய்த வழக்கில் கணவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-07-21 01:27 GMT
ஆவடி,

ஆவடி அடுத்த திருநின்றவூர் நடுகுத்தகை திலீபன் நகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 28). பெயிண்டர். மது குடிக்கும் பழக்கம் உடையவர். இவரது மனைவி கவுரி (24). இவர்களுக்கு தீக்சிதா (3) என்ற மகளும் அஸ்வின் என்ற 1½ வயது மகனும் இருந்தனர்.

கடந்த 18-ந் தேதி கவுரி தனது 2 குழந்தைகளையும் தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்து, தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கைது

இது தொடர்பாக கவுரியின் தாயாரான ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த அருந்ததிபாளையம் பகுதியில் வசித்து வந்த தேசம்மாள் (55) திருநின்றவூர் போலீசில் புகார் செய்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும் இது தொடர்பாக பட்டாபிராம் சரக போலீஸ் உதவி கமிஷனர் வெங்கடேசன் விசாரணை செய்தார்.

விசாரணையில் அடிக்கடி ரமேஷ் மது குடித்து விட்டு வீட்டுக்கு வருவதும் மது குடிக்க கவுரியிடம் பணம் கேட்டு அவரை துன்புறுத்தியதால் தான் மனமுடைந்து அவர் தனது 2 குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து பட்டாபிராம் சரக போலீஸ் உதவி கமிஷனர் வெங்கடேசன் உத்தரவின் பேரில் திருநின்றவூர் போலீசார் ரமேஷை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்