விவசாயி உள்பட 2 பேர் கைது

சாணார்பட்டி அருகே பெற்றோர் மற்றும் அண்ணனை அரிவாளால் வெட்டிய விவசாயி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-07-21 16:11 GMT
திண்டுக்கல் : 

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள தவசிமடையை சேர்ந்தவர் சின்னையா (வயது 69). இவர்களது மூத்த மகன் மரிய யாகப்பன் (45). இளைய மகன் லூர்துராஜ் (42). விவசாயி. இவர்கள் 2 பேருக்கும் இடையே சொத்து தகராறு இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. 

இதில், ஆத்திரமடைந்த லூர்துராஜ், தனது மனைவி சகாயபிரியா, மாமியார் சேசம்மாள், உறவினர்கள் விசுவாசம், பிரகாஷ் ஆகியோருடன் சேர்ந்த மரிய யாகப்பனை அரிவாளால் வெட்டினர். 

இதை தடுக்க தந்தை சின்னையா (69), தாயார் மரியபாக்கியம் (62) ஆகியோருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் காயமடைந்த 3 பேரும் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

 இதுகுறித்து மரியயாகப்பன் கொடுத்த புகாரின் பேரில் லூர்துராஜ், சகாயபிரியா உள்பட 5 பேர் மீது சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை தேடி வந்தனர். 

இந்தநிலையில் வெளியூர் தப்பி செல்வதற்காக விராலிபட்டி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த லூர்துராஜ், அவரது உறவினர் விசுவாசத்தை போலீசார் கைது செய்தனர். மற்ற 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்