சமயபுரம் அருகே தோட்டத்தில் 4 ஆயிரம் மதுபாட்டில்கள் பதுக்கிய 2 பேர் கைது

சமயபுரம் அருகே தோட்டத்தில் 4 ஆயிரம் மதுபாட்டில்களை பதுக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-07-21 19:52 GMT
சமயபுரம், 

சமயபுரம் அருகே தோட்டத்தில் 4 ஆயிரம் மதுபாட்டில்களை பதுக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

4 ஆயிரம் மதுபாட்டில்கள் பதுக்கல்


  சமயபுரம் அருகே உள்ள இருங்களுர் பகுதியில் தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 4 ஆயிரம் மதுபாட்டில்களை சமயபுரம் போலீசார் நேற்று முன்தினம் பறிமுதல் செய்தனர். மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த நபர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடிவிட்டார்.

  இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜசேகரன், குமரேசன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். விசாரணையில், தெற்கு இருங்களுரை சேர்ந்த லாரன்ஸ் (வயது 45) என்பவர் அவருக்கு சொந்தமான தோப்பில் மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தததும், சமயபுரம் அருகே உள்ள ராஜா கல்லுக்குடியைச் சேர்ந்த சர்தார் (45) இதற்கு உடந்தையாக இருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

2 பேர் கைது

இதைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் இருவரையும் தேடிவந்தனர். இந்நிலையில், அப்பகுதியில் உள்ள வைரம் நகர் சுடுகாட்டில் இருவரும் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.

 இதைத் தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் இருவரையும் கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில் கொரோனா ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி அதிக விலைக்கு விற்பதற்காக பல்வேறு அரசு மதுபானக் கடைகளில் மது பாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்று வந்தது தெரியவந்தது.

மேலும் செய்திகள்