கொலையில் சம்பந்தப்பட்டவரின் மகன் திருமணத்தில் பங்கேற்ற 3 போலீஸ் அதிகாரிகளுக்கு நூதன தண்டனை

கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவரின் மகன் திருமணத்தில் கலந்து கொண்ட பெண் போலீஸ் உள்பட 3 போலீஸ் அதிகாரிளுக்கு நூதன தண்டனை வழங்கி கொப்பல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். அவர்கள் 3 பேரும் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Update: 2021-07-21 21:04 GMT
கொப்பல்: கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவரின் மகன் திருமணத்தில் கலந்து கொண்ட பெண் போலீஸ் உள்பட 3 போலீஸ் அதிகாரிளுக்கு நூதன தண்டனை வழங்கி கொப்பல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். அவர்கள் 3 பேரும் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

மாணவர் கொலை

கொப்பல் மாவட்டம் கங்காவதி துணை போலீஸ் சூப்பிரண்டாக இருந்து வருபவர் ருத்ரேஷ். இதுபோல், கங்காவதி புறநகர் போலீஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் உதயரவி. மேலும் கனககிரி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் தாராபாய். கொப்பல் மாவட்டத்தில் கடந்த 2015-ம் ஆண்டு மாணவரான எல்லாலிங்கா கொலை செய்யப்பட்டு இருந்தார். இந்த கொலை சம்பவம் கொப்பலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த கொலை வழக்கில் அனுமேஷ் நாயக் என்பவரை கொப்பல் போலீசார் கைது செய்திருந்தனர். இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அவர் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அனுமேஷ் மகனின் திருமணம் கனககிரியில் நடந்தது.

போலீசாருக்கு கட்டாய விடுமுறை

இந்த திருமணத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு ருத்ரேஷ், சர்க்கிள் இன்ஸ்பெக்டர் உதயரவி, சப்-இன்ஸ்பெக்டர் தாராபாய் ஆகிய 3 பேரும் கலந்து கொண்டனர். பரபரப்பை ஏற்படுத்தி இருந்த ஒரு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவரின் மகன் திருமணத்தில் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டு இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அவர்கள் 3 பேரும் திருமணத்தில் கலந்து கொண்டதற்கான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

இது கொப்பல் போலீசாருக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தியது. இதையடுத்து, போலீஸ் அதிகாரிகளான ருத்ரேஷ், உதயரவி, தாராபாய் ஆகிய 3 பேருக்கும் கட்டாய விடுமுறை அளித்து, அவர்களுக்கு தண்டனை வழங்கி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார். மேலும் திருமணத்தில் கலந்து கொண்டது குறித்து 3 பேரிடமும் விளக்கமும் கேட்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்