முழு கொள்ளளவை நெருங்கும் அமராவதி அணை

மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஆறுகளில் தொடர்ந்து நீர்வரத்து ஏற்பட்டு அமராவதி அணை முழு கொள்ளளவை நெருங்கி வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Update: 2021-07-22 16:40 GMT
தளி
மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஆறுகளில் தொடர்ந்து நீர்வரத்து ஏற்பட்டு  அமராவதி அணை முழு கொள்ளளவை நெருங்கி வருகிறது.  இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
அமராவதி அணை
மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரின் அடர்ந்த வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற நீராதாரங்களை அடிப்படையாகக் கொண்டு அமராவதி அணை கட்டப்பட்டுள்ளது. அணைக்கு மழைக்காலங்களில் வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற தேனாறு, பாம்பாறு, சின்னாறு மற்றும் துணைஆறுகள் மூலமாக நீர்வரத்தை அளித்து வருகிறது. 
அதை அடிப்படையாகக் கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் உள்ள 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.அத்துடன் அமராவதிஆறு மற்றும் பிரதான கால்வாயை ஆதாரமாகக்கொண்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பலத்த மழை
இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அமராவதிஅணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் சாரல்மழையும், அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது.இதனால் ஆறுகளில் தொடர்ந்து நீர்வரத்து ஏற்பட்டு உள்ளது.இதன் காரணமாக அமராவதி அணைக்கு வந்து கொண்டுள்ள தண்ணீரின் அளவும் அதிகரித்து உள்ளதால் அணையின் நீர் இருப்பும் வேகமாக உயர்ந்து வருகிறது.அதன்படி கடந்த 13ந் தேதி காலை 66.24 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் கடந்த 10 நாட்களில் 15.19 அடி உயர்ந்து நேற்று 81.43 அடியாக அதிகரித்து உள்ளது.
மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வானம் தொடர்ந்து மேகமூட்டமாக காணப்படுவதுடன் கனமழை பெய்வதற்கான சூழலும் நிலவி வருகிறது.இதன் காரணமாக அணைக்கு அதிகப்படியான நீர்வரத்து ஏற்பட்டு அணை முழுகொள்ளளவை எட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.அணைக்கு வந்து கொண்டுள்ள நீர்வரத்தை உதவி பொறியாளர் பாபுசபரீஸ்வரன் தலைமையிலான பொதுப்பணித்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
அமராவதி அணையின் மொத்த உயரம் 90 அடியாகும்.நேற்று மாலை 6 மணி நிலவரப்படி அணையில் 81.43 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,419 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

மேலும் செய்திகள்