மத்திகிரியில் சீட்டு நடத்தி பணம் மோசடி செய்ததாக பெண் மீது புகார்

ஓசூர் அருகே மத்திகிரியில் சீட்டு நடத்தி பணம் மோசடி செய்ததாக பெண் மீது புகார் அளித்தனர்.

Update: 2021-07-22 16:46 GMT
மத்திகிரி, 

ஓசூர் அருகே மத்திகிரி பொதிகை நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 55). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி லதா (50). லதா கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மாத சீட்டு நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. அவரிடம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சீட்டு போட்டு இருந்தனர்.

இந்தநிலையில் சமீபகாலமாக சீட்டு எடுத்தவர்களுக்கு லதா முறையாக பணம் வினியோகம் செய்யவில்லை என்று தெரிகிறது. இது ஒருபுறம் இருக்க கடந்த 10 நாட்களுக்கும் மேலாக லதா வீடு பூட்டி கிடந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் சீட்டில் பணம் கட்டிய ஏராளமான பொதுமக்கள் மத்திகிரி போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். பின்னர் அங்கிருந்த போலீசாரிடம் லதா சீட்டு நடத்தி லட்சக்கணக்கான ரூபாயை மோசடி செய்து விட்டு தலைமறைவாகி விட்டதாகவும், எனவே அவரை கண்டுபிடித்து ரூபாயை மீட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தனர். இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலத்தில் அளிக்கும்படி போலீசார் கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் லதா வீட்டின் முன்பு திரண்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்