ஊட்டி,
நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் வளாக அரங்கில் வங்கியாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் திறன் மேம்பாட்டு பயிற்சியில் சுய வேலைவாய்ப்பு தையல் பயிற்சி பெற்ற 15 பேருக்கு ரூ.90 ஆயிரம் மதிப்புள்ள தையல் எந்திரங்கள்,
5 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.38 லட்சம் கடன் வழங்கும் ஆணை, இந்தியன் வங்கி மூலம் 20 சாலையோர வியாபாரிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சத்துக்கான காசோலை, தாட்கோ திட்டத்தின் கீழ் 2 பேருக்கு ரூ.14 லட்சம் மதிப்பில் மானியத்துடன் கூடிய 2 சுற்றுலா வாகனங்கள் என 42 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் உலக மக்கள் தொகை தினத்தையொட்டி ஊட்டி அரசு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகளுக்கு நடத்தப்பட்ட வினாடி-வினா, ஓவிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சத்யராஜா, தாட்கோ மேலாளர் ரவிச்சந்திரன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.