60 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

60 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

Update: 2021-07-23 14:58 GMT
பனைக்குளம்
மண்டபம் அருகே உள்ள பிரப்பன்வலசை கடற்கரை பகுதியில் மண்டபம் வனச்சரகர் வெங்கடேஷ் தலைமையில் வனவர் மகேந்திரன் மற்றும் வன காப்பாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வனத்துறையினரை கண்டதும் இருசக்கர வாகனம் ஒன்றை நிறுத்திவிட்டு 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். அந்த இருசக்கர வாகனத்தில் பிளாஸ்டிக் டப்பாவில் இருந்த சுமார் 25 கிலோ கடல் அட்டைகள் மற்றும் இருசக்கர வாகனத்தையும் வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் கரையோரத்தில் உள்ள கடல் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 35 கிலோ கடல் அட்டைகளையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 60 கிலோ கடல் அட்டைகள் உயிருடன் இருப்பது தெரிய வந்தது. இதைதொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட உயிருடன் இருந்த 60 கிலோ கடல் அட்டைகள் ராமேசுவரம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் மண்டபம் தென்கடல் பகுதியில் வனத்துறையினரால் கடலில் விடப்பட்டது.  பிரப்பன் வலசை கடற்கரை பகுதியில் வனத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள் பதப்படுத்தப்பட்ட பின்பு இலங்கைக்கு கடத்தப்படும் என்றும் கூறப்படுகின்றது. கடல் அட்டைகளை இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்து விட்டு வனத்துறையினரை கண்டதும் தப்பியோடிய நபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்