வேனில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

கரூர் அருகே வேனில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-07-24 18:16 GMT
கரூர்
வாலிபர் படுகாயம்
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மீலாம்பட்டியை சேர்ந்தவர் வினோத் (வயது 20). இவர் கரூர் அருகே ஆத்தூர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று வினோத்தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் ஒரு வேனின் மீது நின்று கொண்டு இருந்துள்ளார்.  அப்போது தெரியாமல் அந்த வேனை டிரைவர் புருஷோத்தமன் (28) முன்னோக்கி இயக்கி பிரேக் பிடித்தார். அப்போது எதிர்பாராத விதமாக வேனில் மேல் இருந்து நிலைதடுமாறி வினோத்  விழுந்து படுகாயம் அடைந்தார். 
பலி
இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
 இதுகுறித்த புகாரின்பேரில், வாங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்