தொப்பூர் கணவாயில் கன்டெய்னர் லாரி மோதி டேங்கர் லாரி கவிழ்ந்தது; சரக்கு வேன் தீப்பிடித்து எரிந்தது டிரைவர்கள் உள்பட 3 பேர் படுகாயம்

தொப்பூர் கணவாயில் கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் டேங்கர் லாரி கவிழ்ந்தது. மேலும் சரக்கு வேன் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்துகளில் டிரைவர்கள் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2021-07-24 18:28 GMT
நல்லம்பள்ளி:

கன்டெய்னர் லாரி மோதியது
மராட்டிய மாநிலத்தில் இருந்து கேரளாவுக்கு கார்கள் ஏற்றிக்கொண்டு ஒரு கன்டெய்னர் லாரி, தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் வழியாக நேற்று காலை வந்து கொண்டு இருந்தது. இந்த லாரியை டிரைவர் பிரவீன் (வயது 24) என்பவர் ஓட்டி வந்தார். கட்டமேடு அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னர் லாரி சாலையில் தாறுமாறாக ஓடி, முன்னால் சென்ற சரக்கு வேன் மற்றும் காலி டேங்கர் லாரி மீது அடுத்தடுத்து மோதியது.
இந்த விபத்தில் சரக்கு வேன் திடீரென தீப்பிடித்து கொண்டது. காலி டேங்கர் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பாலக்கோடு பகுதியை சேர்ந்த டிரைவர் சிவா (26), கிளீனர் விசாலத் (32) மற்றும் டேங்கர் லாரி டிரைவர் பிரவீன் ஆகிய 3 பேரும் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச் சாவடி ரோந்து படையினர், தர்மபுரி தீயணைப்பு மீட்பு படையினர் விரைந்து வந்து சரக்கு வேனில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். மேலும் விபத்தில் சிக்கிய 3 பேரையும் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து காரணமாக தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் கவிழ்ந்த கன்டெய்னர் லாரி, டேங்கர் லாரி, சரக்கு வேனை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்