பெண்ணிடம் நகை பறித்த 2 பேர் கைது

ஆலங்குளம் அருகே பெண்ணிடம் நகை பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-07-24 20:15 GMT
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மனைவி சுடலி (வயது 58). இவர் சம்பவத்தன்று மருதம்புத்தூர் - கரும்புளியூத்து சாலையில் உள்ள தங்கள் தோட்டத்திற்கு நடந்து சென்றார். மருதம்புத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சென்ற போது, எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர், சுடலி கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலியைப் பறித்தார். இதில் சுமார் 9 கிராம் எடையுள்ள ஒரு பகுதியை அந்த வாலிபர் பறித்து கொண்டு தப்பி சென்று விட்டார். இதுகுறித்து சுடலி ஆலங்குளம் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் தனிப்படை அமைத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் விசாரணை நடத்தினர். அதில், மேலப்பாளையம் கருங்குளம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் நாகராஜா (25) என்பவர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் ஆலங்குளம், நல்லூர், மருதம்புத்தூர் ஆகிய பகுதிகளில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதும், நல்லூர் சங்கரன் மகன் மகேஷ் (27) என்பவருக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளதும் தெரியவந்தது. இதனையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்