செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை; குழந்தையை கடத்த முயற்சி வெல்டருக்கு வலைவீச்சு

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து குழந்தையை கடத்த முயன்ற வெல்டரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2021-07-26 04:52 GMT
செங்கல்பட்டு,

செங்கல்பட்டு அருகேயுள்ள பள்ளியகரம் பகுதியை சேர்ந்தவர் 30 வயது பெண். இவருக்கு 2½ வயதில் குழந்தை உள்ளது. குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தினர். அதன் பேரில் குழந்தையை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். குழந்தையுடன் தாயாரும் உடன் இருந்தார்.

அப்போது செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த பணியாக வெல்டிங் வேலை செய்து வந்த சுரேந்திரன் (வயது 42) தாய்க்கு பாலியல் தொல்லை கொடுத்து குழந்தையை கடத்த முயன்றதாக கூறப்படுகிறது.

முற்றுகை

அந்த பெண் கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் ஒன்று கூடியதால் சுரேந்திரன் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண்ணின் உறவினர்கள் சுரேந்திரனை உடனடியாக கைது செய்யவேண்டும் என்று கூறி செங்கல்பட்டு ஆஸ்பத்திரி வளாகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து பேச்சுவார்தை நடத்த சம்பவ இடத்துக்கு வந்த செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி டீன் முத்துகுமரனின் வாகனத்தை அந்த பெண்ணின் உறவினர்கள் முற்றுகையிட்டனர். ஆஸ்பத்திரி பணியில் இருந்து அவர் நீக்கப்படுவார். போலீஸ் தரப்பில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.

இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக செங்கல்பட்டு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெல்டர் சுரேந்திரனை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்