கீழ்க்கட்டளை ஏரிக்கரையில் இருந்த அம்மன் சிலையை அகற்றியதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

கீழ்க்கட்டளை ஏரிக்கரையில் இருந்த அம்மன் சிலையை பல்லாவரம் நகராட்சி அதிகாரிகள், அகற்றியதை கண்டித்து அந்த பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-07-27 04:52 GMT
ஆலந்தூர்,

சென்னையை அடுத்த கீழ்க்கட்டளை ஏரிக்கரையில் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு ரேணுகாதேவி அம்மன் சிலையை அப்பகுதியை சேர்ந்த சிலர் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். அப்போதே அந்த சிலையை அகற்றி, அதை வைத்தவர்கள் வசம் பல்லாவரம் நகராட்சி அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

இந்தநிலையில் ஆடி மாதத்தை முன்னிட்டு திடீரென மீண்டும் ஏரிக்கரையில் அதே இடத்தில் அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்து, பூஜைகள் செய்து அப்பகுதி மக்கள் வழிபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் அனுமதி இன்றி நிறுவப்பட்ட அந்த சிலையை பல்லாவரம் நகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.

ஆனால் சிலையை மீண்டும் அதை வைத்தவர்களிடம் ஒப்படைக்காமல் பம்மல் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

பொதுமக்கள் சாலை மறியல்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாக்கியம்மாள் நகர், தேன்மொழி நகரை சேர்ந்த பெண்கள் உள்பட பொதுமக்கள் திடீரென ரேடியல் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த மடிப்பாக்கம் போலீசார், இது தொடர்பாக பல்லாவரம் தாசில்தாரிடம் தெரிவித்து உரிய தீர்வு பெற்று கொள்ளுமாறு கூறி சாலை மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்