மயிலம் அருகே துணிகரம்: பட்டப்பகலில் பெண்ணிடம் நகை பறிப்பு 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
மயிலம் அருகே பட்டப்பகலில் பெண்ணிடம் நகை பறித்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மயிலம்,
மயிலம் அடுத்த கொள்ளியங்குணம் குருசாமி நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி அமுதா (வயது 40). இவர் நேற்று மதியம் கொள்ளியங்குணம் பஸ் நிறுத்தத்தில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது கூட்டேரிப்பட்டு பகுதியல் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், அமுதாவின் அருகே வந்தனர். அவர் சற்றும் எதிர்பாரத நேரத்தில், அமுதாவின் கழுத்திலிருந்த 7 பவுன் தாலி செயினை பறித்துக்கொண்டு அங்கிருந்து வேகமாக தப்பி சென்றுவிட்டனர்.
வலைவீச்சு
இதுகுறித்து அமுதா மயிலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் கூட்டேரிப்பட்டு-மயிலம் சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் நகையை பறித்து சென்றவர்களின் உருவம் பதிவாகி இருக்கிறதா என்றும் போலீசார் அதில் உள்ள காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.
பட்டப்பகலில் நடந்த இந்த வழிப்பறி சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.