மைசூரு அரச குடும்பத்திற்கு சொந்தமான 1450 ஏக்கர் நிலத்தை யாரும் உரிமை கொண்டாட கூடாது - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

மைசூரு அரச குடும்பத்திற்கு சொந்தமான 1,450 ஏக்கர் நிலத்தை யாரும் உரிமை கொண்டாட கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

Update: 2021-07-27 21:04 GMT
மைசூரு:

1,450 ஏக்கர் நிலம்

  மைசூரு மாவட்டம் சாமுண்டி மலை அடிவாரத்தில் உள்ள குருபாரஹள்ளி, ஆலனஹள்ளி, சவுடஹள்ளி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 1,450 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. அந்த நிலங்களை அவர்கள் சொந்தம் கொண்டாடினர். இதுபற்றி அறிந்த மைசூரு மாவட்ட கலெக்டராக இருந்த ரோகிணி சிந்தூரி கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் தனியாரால் ஆக்கிரமிக்கபட்டு உள்ள 1,450 ஏக்கர் நிலம் மைசூரு அரச குடும்பத்திற்கு சொந்தமானது என்றும், அதை மாநில அரசு எடுத்துக்கொள்ள ஆவன செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

  இதை எதிர்த்து அந்த நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்தவர்கள் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இரு வழக்குகளையும் ஒன்றாக இணைத்து விசாரணை நடத்திய கர்நாடக ஐகோர்ட்டு மைசூரு அரச குடும்பத்திற்கு சொந்தமான அந்த சொத்தை யாரும் உரிமை கொண்டாட முடியாது என்றும், ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு உடனே அரச குடும்பத்தினரிடம் ஒப்படைக்குமாறும் கூறி உத்தரவிட்டார்.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

  இதை எதிர்த்து நில ஆக்கிரமிப்பாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதேபோல் அந்த நிலத்தை அரசுடைமையாக்க வேண்டும் என்று கோரி அப்போதைய மைசூரு மாவட்ட கலெக்டர் ரோகிணி சிந்தூரியும் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி நேற்று தீர்ப்பு வழங்கினார். அவர் இவ்வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து தீர்ப்பளித்தார்.

  அதாவது மைசூரு அரச குடும்பத்துக்கு சொந்தமான அந்த நிலத்தை யாரும் உரிமை கொண்டாடக்கூடாது என்று கூறி தீர்ப்பளித்தார். இதன்மூலம் அந்த 1,450 ஏக்கர் நிலமும் அரசு குடும்பத்துக்கு சொந்தமான என்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மைசூரு அரச குடும்பத்தினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மேலும் செய்திகள்