செல்போனில் பேசி பதிவு செய்து விட்டு விதவை பெண் தற்கொலை

கடலூர் அருகே செல்போனில் பேசி பதிவு செய்து விட்டு விதவை பெண் தற்கொலை செய்து கொண்டார். இவரை தற்கொலைக்கு தூண்டியதாக தம்பதி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-07-28 19:28 GMT
கடலூர், 

கடலூர் அருகே உள்ள ராமாபுரம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் கண்ணபிரான். இவருடைய மனைவி நீலாவதி (வயது 36). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கண்ணபிரான் இறந்து விட்டார்.
இந்நிலையில் நீலாவதி தனக்கு சொந்தமான நிலத்திற்கு, அதே ஊரை சேர்ந்த  கிருஷ்ணமூர்த்தி மகன் வீரமணி (46), அவரது மனைவி ராஜேஸ்வரி (25), வீரமணி தம்பி சச்சிதானந்தம் (41) ஆகிய 3 பேரின் நிலத்தை தாண்டிதான் செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் போது, அவர்கள் 3 பேரும் நீலாவதியை ஆபாசமாக பேசி வந்தனர்.

தற்கொலை

வழக்கம்போல் நேற்று மதியம் 3 பேரின் நிலத்தை தாண்டி நீலாவதி, தனது நிலத்திற்கு சென்றதாக தெரிகிறது. இதை பார்த்த 3 பேரும் அவரை ஆபாசமாக பேசி, எங்களுடைய நிலத்திற்குள் நீ ஏன் வருகிறாய் என்று கேட்டதாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த நீலாவதி தன்னுடைய வாழைத்தோட்டத்தில் இருந்த விஷத்தை எடுத்து குடித்தார். பின்னர், செல்போனில், தன்னுடைய சாவுக்கு வீரமணி, ராஜேஸ்வரி, சச்சிதானந்தம் ஆகிய 3 பேர் தான் காரணம் என்று பேசி பதிவு செய்தார். இதனை தொடர்ந்து மீதமிருந்த விஷத்தை எடுத்து குடித்த அவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டார்.

3 பேர் கைது

இது பற்றி அவரது தம்பி சிவசக்தி திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இறந்த நீலாவதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நீலாவதியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து, வீரமணி, ராஜேஸ்வரி, சச்சிதானந்தம் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்