விவசாயிக்கு அரிவாள் வெட்டு

மாங்காய் பறிக்கும் தகராறில் விவசாயிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக அவரது அண்ணன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-07-29 16:39 GMT
வேதாரண்யம்:
மாங்காய் பறிக்கும் தகராறில் விவசாயிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக அவரது அண்ணன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சொத்து பிரச்சினை
வேதாரண்யம் புதுப்பள்ளி கிழக்கு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது52). இவருடைய அண்ணனான அதே பகுதியை சேர்ந்த செல்லையன் (60). இருவரும் விவசாயிகள். இவர்களுக்கு இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 
இந்த நிலையில் நேற்று பிரச்சினைக்குரிய மாமரத்தில் ஏறி சுப்பிரமணியன் மாங்காய் பறித்து கொண்டிருந்தார். அப்போது  அங்கு வந்த அவருடைய அண்ணன் செல்லையன் மற்றும் அவரது குடும்பத்தினர் மாங்காய் பறிக்கக்கூடாது என தகராறு செய்தனர்.
அரிவாள் வெட்டு
 இதில் ஆத்திரம் அடைந்த செல்லையன் மகன் கார்த்திக்(32) தான் வைத்திருந்த  அரிவாளால் சுப்பிரமணியனை வெட்டினார். மேலும் செல்லையன் மற்றும் அவரது மனைவி பொற்செல்வி ஆகியோர் சுப்பிரமணியனை கையால் தாக்கினர்.  இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துக்வகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
3 பேர் கைது
இதுகுறித்து சுப்பிரமணியன் மனைவி பாக்கியவதி வேட்டைக்காரனிருப்பு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நாகலட்சுமி வழக்குப்பதிவு செய்து செல்லையன் மற்றும் அவரது மகன் கார்த்திக், மனைவி பொற்செல்வி ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்