திட்டக்குடி அருகே விவசாயி வீ்ட்டில் ரூ.8 லட்சம் நகை, பணம் கொள்ளை

திட்டக்குடி அருகே பட்டப்பகலில் விவசாயி வீ்ட்டில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2021-07-29 16:46 GMT
ராமநத்தம், 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ராமநத்தம் அருகே உள்ள பட்டாக்குறிச்சியை சேர்ந்தவர் பச்சமுத்து(வயது 60), விவசாயி. இவர் நேற்று காலை தனது வீட்டை பூட்டிவிட்டு மனைவி செல்வியுடன் வயலுக்கு சென்றார். பின்னர் மதியம் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது.

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் அதில் வைத்திருந்த 21 பவுன் நகைகள், ரூ.72 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. அவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது. 

பின்னர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு, அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். 

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

விசாரணையில் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த ரூ.8 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்து சென்றனர்.
மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில் விவசாயி வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்