கடந்த 10 ஆண்டுகளில் டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்றுள்ள முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் ஊழியர்கள் மாநில சம்மேளனம் வலியுறுத்தல்

கடந்த 10 ஆண்டுகளில் டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்றுள்ள முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஊழியர்கள் மாநில சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

Update: 2021-07-29 16:53 GMT
விழுப்புரம், 

டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தின் மாநில சம்மேளனத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சம்மேளன துணைத்தலைவர் பாரதி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாநில துணைத்தலைவர் பொன்முடி, மாவட்ட தலைவர் முத்துக்குமரன், சம்மேளன பொதுச்செயலாளர் திருச்செல்வன், மாவட்ட செயலாளர் கணபதி, மாவட்ட தலைவர் சிங்காரவேலு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் சம்மேளன பொதுச்செயலாளர் திருச்செல்வன், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முறைகேடு

டாஸ்மாக் நிறுவனம் தமிழகத்தில் அதிக வருவாய் தரும் நிறுவனமாக இருந்து வருகிறது. ஆண்டுக்கு ரூ.35 ஆயிரம் கோடி வருமானம் வருகிறது. ஆனால் இந்த துறையில் ஏராளமான முறைகேடுகள் கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்றுள்ளன. 

மதுபாட்டில்கள் கொள்முதல், கடைகள் வாடகை, பணியாளர்கள் பணியிட மாற்றம், மதுபாட்டில்களை கொண்டு செல்லும் வாகனங்களை ஏற்பாடு செய்தல் என்று பல்வேறு நிலைகளில் ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளன.

இந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். டாஸ்மாக் நிர்வாகத்தில் சீர்திருத்தத்தை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக நேரடியாக தற்காலிக நியமனம் செய்யப்பட்டுள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளர்களை நீக்கம் செய்ய வேண்டும். 

கொரோனா முதல் அலையின்போது டாஸ்மாக் கடைகளில் இருந்த மதுபாட்டில்களை கிடங்குகளுக்கும், மண்டபங்களுக்கும் கொண்டு சென்று வைத்திருந்தபோது மாயமான மதுபாட்டில்களுக்கு ரூ.112 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. பணியாளர்கள், மதுபாட்டில்களை கடைகளில் இருந்து ஒப்படைத்தப்பிறகு மதுபாட்டில்கள் குறைந்ததற்கு எப்படி பணியாளர்கள் பொறுப்பேற்க முடியும்.

போராட்டம் 

ஆகவே, இந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்தக்கோரியும், டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரியும் வருகிற 5-ந் தேதி டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றுவார்கள். இதனை தொடர்ந்து, சட்டப்பேரவை கூட்டத்தின்போது சென்னையில் கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்