திருவெறும்பூர் அருகே கள்ளக்காதலிக்கு அரிவாள் வெட்டு; தடுக்க வந்த மகள் படுகாயம்; கொத்தனார் கைது
திருவெறும்பூர் அருகே பேசுவதை நிறுத்திய கள்ளக்காதலிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. அதை தடுக்க முயன்ற அவருடைய மகள் படுகாயம் அடைந்தார். இதுதொடர்பாக கொத்தனாரை போலீசார் கைது செய்தனர்.
திருவெறும்பூர்,
திருவெறும்பூர் அருகே பேசுவதை நிறுத்திய கள்ளக்காதலிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. அதை தடுக்க முயன்ற அவருடைய மகள் படுகாயம் அடைந்தார். இதுதொடர்பாக கொத்தனாரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
கொத்தனார்
திருவெறும்பூரை அடுத்த குண்டூர் ஊராட்சி திருவளர்ச்சி பட்டி கீழத்தெருவை சேர்ந்தவர் மதியழகன். இவரது மனைவி சரோஜா (வயது 42). இவர்களுக்கு 19 மற்றும் 22 வயதில் 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். நேற்று காலை 6 மணிக்கு மொராய்ஸ் சிட்டிக்கு மதியழகன் வேலைக்கு சென்றுவிட்டார்.
வீட்டின் மாடியில் சரோஜாவின் மகன் தூங்கி உள்ளார். சரோஜா தனது மகள்களுடன் வீட்டிற்குள் இருந்துள்ளார். அப்போது சரோஜாவின் வீட்டிற்கு உறையூர் ராமலிங்க நகர் பகுதியை சேர்ந்த கொத்தனார் சதீஷ் (39) வந்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அரிவாள் வெட்டு
வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த சதீஷ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சரோஜாவின் தலையில் வெட்டியதாக கூறப்படுகிறது. இதை தடுக்க வந்த சரோஜாவின் இளைய மகளின் கையில் வெட்டிவிட்டு சதீஷ் தப்பி ஓட முயன்றார்.
இதை பார்த்த பொதுமக்கள், சதீசை கையும் களவுமாக பிடித்து நவல்பட்டு போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் படுகாயம் அடைந்த தாய், மகளை சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
கள்ளத்தொடர்பு
சதீசிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மதியழகன் வீட்டில் வீடு கட்டுவதற்காக சதீஷ் வந்ததும், அப்போது, சரோஜாவுக்கும், அவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு, இருவரும் நெருங்கி பழகி வந்ததாகவும், தற்போது சரோஜா தன்னிடம் பேசாததால் அவரை அரிவாளால் வெட்டியதாகவும் கூறி உள்ளார்.இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீசை கைது செய்தனர்.