ஊழலை தவிர்க்க டெண்டர் வெளிப்படைத் தன்மை விதிகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும் ஐகோர்ட்டு அறிவுறுத்தல்

ஊழலை தவிர்க்க டெண்டர் வெளிப்படைத் தன்மை விதிகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும் ஐகோர்ட்டு அறிவுறுத்தல்.

Update: 2021-07-30 02:20 GMT
சென்னை,

சென்னையை அடுத்த பம்மல் நகராட்சியில் கழிவுநீர் கால்வாய் சுத்தப்படுத்தும் பணிக்கான டெண்டர் ஒதுக்கீட்டை எதிர்த்து அன்னபூரணி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், “டெண்டர் பெற்ற நிறுவனம் உரிய தகுதியை பெற்றிருக்கவில்லை. மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகள், பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரும்போது ஒரே மாதிரியான நடைமுறைகளை பின்பற்றுவதில்லை. டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்ட விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை” என்று வாதிட்டார்.

நகராட்சி நிர்வாகம் சார்பில், “இந்த டெண்டரில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டிய பின், டெண்டரை ரத்து செய்து மீண்டும் டெண்டர் கோர அவகாசம் வழங்க வேண்டும்” என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, உள்ளாட்சி அமைப்புகளில் டெண்டர் கோரும்போது, ஊழல், முறைகேடு புகார்களை தவிர்க்க டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்ட விதிகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.

மேலும் செய்திகள்