தூய்மை பணியாளர்கள் மறுவாழ்வுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு எம்.பி. கேள்வி

தூய்மை பணியாளர்கள் மறுவாழ்வுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு எம்.பி. கேள்வி.

Update: 2021-08-05 09:36 GMT
சென்னை,

நாடாளுமன்றத்தில் தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி., ‘தூய்மை பணியாளர்களின் துயரத்தைப் போக்க தேவையான உபகரணங்களும், பாதுகாப்பு கருவிகளும் வழங்கப்பட்டுள்ளனவா? அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், மறுவாழ்வுக்கும் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?’ என மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணை மந்திரி ராம்தாஸ் அத்வாலேயிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு ராம்தாஸ் அத்வாலே அளித்த பதில் வருமாறு:-

தூய்மை பணியாளர்களின் நிலை ஓரளவுக்கு மேம்பட்டிருந்தபோதிலும், தரமான உபகரணங்களை வழங்குவதற்கு, தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ், மேலும் முதலீடு தேவையாகிறது. சுகாதாரம் மாநில பட்டியலில் இருந்தாலும், தூய்மை இந்தியா (நகரம்) திட்டத்தின்படி, திடக்கழிவுகளை கையாளுவதற்கும், நகர நிர்வாகங்களுக்கு தேவையான உபகரணங்களை வாங்குவதற்கும், கழிவுகளிலிருந்து உரம் தயாரிக்கவும், கட்டுமானக் கழிவுகளையும், நெகிழி கழிவுகளையும் கையாளுவதற்கும் உரிய நிதியுதவி மாநிலங்களுக்கு அளிக்கப்படுகிறது. மேலும், கழிவுநீர் வடிகால்களை நிர்வகிக்கவும், கழிவுநீர் தொட்டிகளை தானியங்கி கருவிகளின் உதவியால் இயக்கவும் தேவையான நிதியுதவியை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர வளர்ச்சித் துறை அளித்துவருகிறது. மனித கழிவுகளை மனிதர்களே அகற்றிடும் அவலத்தைத் தடுக்கும் நோக்கத்துடன், அதற்கான வாகனங்கள் மற்றும் உபகரணங்களை வாங்குவதற்கு ரூ.5 லட்சம் வரையில் மத்திய அரசு மானியம் வழங்கிவருகிறது. இதுவரையில் இதற்கான பணிகள் 246 நகரங்களில் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

மேலும் செய்திகள்