மனைவியின் கழுத்தை அறுத்துக்கொலை கணவரும் தற்கொலை முயற்சி

குடும்பத்தகராறு காரணமாக மனைவியின் கழுத்தை அறுத்துக்கொன்ற கணவர், தானும் கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்றார்.

Update: 2021-08-16 03:19 GMT
சென்னை,

நெல்லை மாவட்டம் சிவகிரி காமராஜ் நகரைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 27). இவரும், அதே மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்த அனு (21) என்பவரும் காதலித்து கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

பாலமுருகனுக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர் என்பதும், தன்னை 2-வதாக திருமணம் செய்து கொண்டதும் அனுவுக்கு அதன்பிறகுதான் தெரியவந்தது. மேலும் பாலமுருகன் சரிவர வேலைக்கு செல்லாமல் சுற்றி திரிந்து வந்தார்.

வேலைக்கு செல்வதற்காக...

இதன் காரணமாக குடும்பம் நடத்த முடியாமல் தவித்த அனுவுக்கும், பாலமுருகனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் அனு, பாலமுருகனை விட்டு பிரிந்து தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

இதற்கிடையில் அனு, காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்தார். இதற்காக கடந்த ஒரு வாரத்துக்கு முன்புதான் கைக்குழந்தையை தாயின் வீட்டில் விட்டுவிட்டு ஒரகடம் வந்தார்.

தொழிற்சாலை நிர்வாகத்தின் சார்பில் வாலாஜாபாத் அடுத்த புளியம்பாக்கத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் செயல்பட்டுவரும் தொழிற்சாலையின் பெண்கள் தங்கும் விடுதியில் அவர் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

கழுத்தை அறுத்து கொலை

இதை அறிந்த பாலமுருகன், புளியம்பாக்கம் வந்து, விடுதியில் தங்கி இருந்த மனைவியை வெளியே அழைத்து சமாதானம் செய்ய முயன்றார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பாலமுருகன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அனுவின் கழுத்தை அறுத்து விட்டு தானும் கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்றார்.

இதில் படுகாயம் அடைந்த அனு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்துவந்த வாலாஜாபாத் போலீசார், உயிருக்கு போராடிய பாலமுருகனை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்