பெண்ணை கொன்று ஏரியில் உடல் வீச்சு: தலைமறைவான கணவர் கைது

பெங்களூருவில் பெண்ணை கொன்று ஏரியில் உடலை வீசிய வழக்கில் தலைமறைவாக இருந்த கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். சரியாக சிக்கன் சமைக்காததால் தீர்த்து கட்டியது அம்பலமாகி உள்ளது.

Update: 2021-08-23 21:40 GMT
பெங்களூரு: பெங்களூருவில் பெண்ணை கொன்று ஏரியில் உடலை வீசிய வழக்கில் தலைமறைவாக இருந்த கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். சரியாக சிக்கன் சமைக்காததால் தீர்த்து கட்டியது அம்பலமாகி உள்ளது.

பெண் மாயம்

பெங்களூரு சோழதேவனஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தரபனஹள்ளியை சேர்ந்தவர் முபாரக். இவரது மனைவி ஷெரீன் பானு(வயது 25). கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அதுபோல், கடந்த 5-ந் தேதியும் தம்பதி இடையே தகராறு உண்டானது. பின்னர் திடீரென்று ஷெரீன் பானு காணாமல் போய் விட்டார். இதுபற்றி அவரது பெற்றோருக்கு எந்த தகவலும் கொடுக்காமல் முபாரக் இருந்துள்ளார்.

இதற்கிடையில், மகளை பற்றி எந்த தகவலும் தெரியாததால் சந்தேகம் அடைந்த ஷெரீன் பானுவின் பெற்றோர் சோழதேவனஹள்ளி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். கணவர் முபாரக் மீது சந்தேகம் இருப்பதாக ஷெரீன் பானுவின் பெற்றோர் போலீசாரிடம் கூறினார்கள். இதையடுத்து, அவரை பிடித்து விசாரிக்க போலீசார் முடிவு செய்திருந்தனர். ஆனாலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரும் தலைமறைவாகி விட்டார்.

கொன்று ஏரியில் உடல் வீச்சு

இந்த நிலையில், தனது வக்கீலுடன் சோழதேவனஹள்ளி போலீஸ் நிலையத்திற்கு வந்த முபாரக் தனது மனைவியை கொலை செய்துவிட்டதாக போலீசாரிடம் கூறினார். உடனே அவரை பிடித்து கைது செய்து விசாரித்தனர். அப்போது தாவணகெரேயை சேர்ந்த முபாரக் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு மனைவியுடன் பெங்களூருவுக்கு வந்து வியாபாரம் செய்து வந்துள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. கடந்த 5-ந் தேதி சிக்கன் குழம்பு சரியாக வைக்கவில்லை என ஷெரீன் பானுவுடன் முபாரக் சண்டை போட்டுள்ளார்.

அப்போது ஆத்திரமடைந்த அவர், வீட்டில் கிடந்த உருட்டு கட்டையால் தாக்கி ஷெரீன் பானுவை கொலை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவரது உடலை ஒரு மூட்டையில் வைத்து கட்டி சிக்கபானவாராவில் உள்ள ஏரியில் வீசியது தெரியவந்தது. கைதான முபாரக் மீது சோழதேவனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மேலும் சிக்கபானவாரா ஏரியில் வீசிய ஷெரீன் பானுவின் உடலை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்