உளுந்தூர்பேட்டை அருகே காணாமல்போன மாணவன் ஏரியில் பிணமாக மீட்பு

உளுந்தூர்பேட்டை அருகே காணாமல்போன மாணவன் ஏரியில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்

Update: 2021-08-27 16:48 GMT
உளுந்தூர்பேட்டை

மாணவன்

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது மகன் சாகித்(வயது 9). இவன் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். 
இந்த நிலையில் நேற்று நண்பர்களுடன் விளையாட சென்ற சாகித் மீண்டும் மாலை வரையில் வீடு திரும்பவில்லை. இதனால் அச்சம் அடைந்த அவனது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் காணவில்லை. பின்னர் இது குறித்து உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் சாகித்தின் பெற்றோர் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

ஏரியில் பிணமாக மீட்பு

இதற்கிடையே போலீசார் நடத்திய விசாரணையில் சாகித் நீர் நிலைக்கு குளிக்க சென்றது தெரியவந்தது. இதையடுத்து மாம்பாக்கம் கிராமத்தைச் சுற்றி உள்ள நீர் நிலைகளில் போலீசார் சாகித்தை தேடினர். அப்போது அங்குள்ள பெரிய ஏரியில் சாகித் பிணமாக மிதந்ததை கண்டனர். இதைப் பார்த்து அவனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
பின்னர் சாகித் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். 

போலீசார் விசாரணை

ஏரியில் குளிக்க சென்றபோது சாகித் நீரில் மூழ்கி இறந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் அவனது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 
9 வயது மாணவன் ஏரியில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் மாம்பாக்கம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்