மத்தூர் அருகே தாய் இறந்த துக்கத்தில் மகளும் சாவு உறவினர்கள் சோகம்

மத்தூர் அருகே தாய் இறந்த துக்கத்தில் மகள் பலியானார். இந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2021-08-27 17:16 GMT
மத்தூர்,

மத்தூர் அருகே தாய் இறந்த துக்கத்தில் மகள் பலியானார். இந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தாய்ப்பாசம்

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே பொம்மேபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி, பவுனம்மாள் (வயது 75) தம்பதி. இவர்களுக்கு 6 மகன்களும், 6 மகள்களும் உள்ளனர். 12 பேருக்கும் திருமணம் செய்து வைத்த கோவிந்தசாமி கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். கணவர் இறந்த துக்கம் தாங்காமல் சரிவர சாப்பிடாமல் மனவேதனையில் அவர் இருந்ததாக கூறப்படுகிறது. 
பவுனம்மாளின் மகள்களில் ஒருவரான மங்கம்மாள் (30) தாய் மீது அதிக பாசம் கொண்டவர். திருமணமாகி மாதம்பதி கிராமத்தில் குடியிருந்தவர் தனது கணவர் முருகனை சமரசம் செய்து தாய் பவுனம்மாளுடன் வசிக்க சம்மதம் பெற்று தாயுடன் வசித்து வந்துள்ளார். பவுனம்மாளுக்கு கடந்த ஒரு மாதமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் இருந்து தாயாரை, மங்கம்மாள் கவனித்து வந்துள்ளார். 
தாய் சாவு
இந்தநிலையில் நேற்று உடல் நலக்குறைவு காரணமாக பவுனம்மாள் திடீரென உயிரிழந்தார். இதனை சற்றும் எதிர்பார்க்காத மங்கம்மாள் கதறியுள்ளார். மற்ற சகோதர, சகோதரிகள் வந்து அவரை சமாதானப்படுத்தியும் அவர் சமாதானமடையவில்லை. தாயின் உடலை கட்டி பிடித்துக்கொண்டு கதறியவாறு இருந்துள்ளார். 
இதனால்அவரை உறவினர்கள் அருகே இருந்த சகோதரர் வீட்டில் படுக்க வைத்துள்ளனர். துக்கம் தாங்காமல் அழுது கொண்டே இருந்த அவர், 2 மணி நேரத்துக்கு பிறகு அமைதியாக இருந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் டாக்டர் ஒருவரை அழைத்து சோதித்தனர். 
மகளும் பலி
அப்போது மங்கம்மாள் இறந்தது தெரியவந்தது. இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தாய் இறந்த 2 மணி நேரத்தில் துக்கம் தாங்காமல் மகளும் பலியான சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்