மனைவியை கொன்ற வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை கிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு
நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை வெட்டிக்கொலை செய்த வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
கிருஷ்ணகிரி,
நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை வெட்டிக்கொலை செய்த வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
வெட்டிக்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டையை அடுத்த கேத்துநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 50). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி காமாட்சி (40). காமாட்சியின் நடத்தையில் சந்தேகப்பட்டு ரவி அடிக்கடி அவருடன் தகராறு செய்து வந்தார். இந்தநிலையில் கடந்த 4.4.2019 அன்று அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த ரவி, மனைவியை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தார். இது குறித்து காமாட்சியின் அண்ணன் ராதாகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் சிங்காரப்பேட்டை போலீசார் ரவியை கைது செய்தனர். இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி லதா நேற்று தீர்ப்பு கூறினார்.
ஆயுள் தண்டனை
குற்றம் சாட்டப்பட்ட ரவிக்கு ஆயுள் தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும் விதித்தார். அபராத தொகை செலுத்தாத பட்சத்தில் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீல் கலையரசி ஆஜராகி வாதாடினார்.