காற்று நிரப்பியபோது டயர் வெடித்து மாணவர் பலி

பெரம்பலூரில் காற்று நிரப்பியபோது டயர் வெடித்ததில், பஞ்சர் கடையில் வேலை பார்த்த மாணவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-08-30 19:27 GMT
பெரம்பலூர்:

டயர் வெடித்தது
கடலூர் மாவட்டம், திட்டக்குடி தாலுகா, வெங்கனூர் புதிய காலனியை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகன் லோகேஷ் (வயது 18). பிளஸ்-2 முடித்துள்ள லோகேஷ் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டீசல் மெக்கானிக் பிரிவில் சேர்ந்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு லோகேஷ் பெரம்பலூர் நான்கு ரோடு அருகே லாரிகளுக்கு பஞ்சர் ஒட்டும் கடை ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். நேற்று முன்தினம் மாலை, அந்த கடையில் பஞ்சரான ஒரு லாரி டயரின் டியூப்புக்கு பஞ்சர் ஒட்டப்பட்டது. பின்னர் அந்த டயருக்குள் பொருத்தப்பட்ட டியூப்புக்கு லோகேஷ் காற்று நிரப்பியுள்ளார். அப்போது திடீரென்று டயர் வெடித்தது.
சாவு
இதில் டயரில் இருந்த இரும்பினாலான வளைவு லோகேசின் தோள்பட்டைகளில் அடித்தது. இதனால் தூக்கி வீசப்பட்ட லோகேஷ் படுகாயமடைந்தார். இதனை கண்ட கடையின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் உடனடியாக லோகேசை மீட்டு சிகிச்கைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி லோகேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்