சுற்றுலா பயணிகளின் காரை சேதப்படுத்திய காட்டெருமை

சுற்றுலா பயணிகளின் காரை சேதப்படுத்திய காட்டெருமை

Update: 2021-08-31 04:55 GMT
குன்னூர்

குன்னூர் அருகே வெலிங்டனில் ராணுவ கட்டுப்பாட்டின் கீழ் ஏரி உள்ளது. இந்த ஏரியை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கவும், படகு சவாரி செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இயற்கை எழில் சூழ ஏரி அமைந்து உள்ளதால், சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரித்தது. இதற்கிடையில் கடந்த ஓராண்டாக கொரோனா பரவல் காரணமாக ஏரி மூடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நேற்று காலையில் வெலிங்டன் ஏரி பகுதிக்கு ஒரு காரில் சில சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் ஏரிக்கு செல்லும் நுழைவு வாயில் மூடப்பட்டு இருப்பதை கண்டு ஏமாற்றம் அடைந்தனர். எனினும் காரில் இருந்தவாறு ஏரியை கண்டு ரசித்தனர். 

அப்போது அங்கு பிளாக் பிரிட்ஜ் வனப்பகுதியில் இருந்து காட்டெருமை ஒன்று வந்தது. உடனே சுற்றுலா பயணிகள் காரின் ஜன்னல்களை மூடி உள்ளே அமர்ந்து கொண்டனர். எனினும் திடீரென ஆவேசம் அடைந்த காட்டெருமை காரை முட்டி சேதப்படுத்தியது.

இதனால் சுற்றுலா பயணிகள் அலறினர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின்னர் சிறிது நேரம் கழித்து காட்டெருமை அங்கிருந்து சென்றது. அதன்பிறகு காரை எடுத்துக்கொண்டு சுற்றுலா பயணிகளும் திரும்பினர்.

மேலும் செய்திகள்