கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத ஓட்டல்கள், திருமண மண்டபங்கள் மீது கடும் நடவடிக்கை: சென்னை மாநகராட்சி

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத ஓட்டல்கள், திருமண மண்டபங்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

Update: 2021-08-31 10:08 GMT
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்

இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளில் 50 நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். மேலும், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், திருமண மண்டபங்கள், விருந்து அரங்கங்கள், சமூக நலக்கூடங்கள் ஆகியவற்றில் பதிவு செய்யப்படும் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை மாநகராட்சிக்கு http://covid19.chennaicorporation.gov.in/covid/marriagehall/ என்ற இணையதள இணைப்பின் வாயிலாக தெரியப்படுத்த வேண்டும் என மாநகராட்சியின் சார்பில் கூட்டங்கள் நடத்தப்பட்டு உரிமையாளர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரூ.200 அபராதம்
அதில், திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அனைவரிடமும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும். மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஓட்டல்கள் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி 50 சதவீத இருக்கைகளுடன் வாடிக்கையாளர்களை அனுமதிக்க வேண்டும்.மேலும், திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் நடைபெறும் போது முக கவசம் அணியாத தனிநபர்களுக்கு ரூ.200 அபராதமும், ஓட்டல்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மேல் அனுமதிக்கப்பட்டால் ஓட்டல் உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்