கார் மோதி சிறுவன் பலி தாய் கண் முன்னே பரிதாபம்

வேடசந்தூர் அருகே தாய் கண் முன்னே கார் மோதி சிறுவன் பலியானான்.

Update: 2021-08-31 17:51 GMT

வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகே உள்ள சல்லையகவுண்டனூரை சேர்ந்தவர் ரங்கசாமி. அவருடைய மனைவி சுப்புலட்சுமி. இவர்களது மகன் மனோஜ் (வயது 6). சுப்புலட்சுமி, சுள்ளெறும்பில் உள்ள ஒரு தனியார் நூற்பாலையில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் மாலை பணி முடிந்து இவர் மில்லில் இருந்து வெளியே வந்தார்.  அப்போது தனது தந்தை ரங்கசாமியுடன் காத்திருந்த சிறுவன் மனோஜ் தனது தாயை பார்த்த மகிழ்ச்சியில் சாலையின் குறுக்காக ஓடினான். அப்போது வேடசந்தூரில் இருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி சென்ற கார் சிறுவன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் மனோஜ் படுகாயமடைந்தான். அக்கம்பக்கத்தினர் அவனை மீட்டு சிகிச்சைக்காக, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவன், மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மனோஜ் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து வேடசந்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்குப்பதிவு செய்து, தங்கச்சியம்மாபட்டியை சேர்ந்த கார் டிரைவர் செந்தில்குமார் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார். தாய் கண் முன்னே கார் மோதி சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்