சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுவதால் திருவாரூர்-மயிலாடுதுறை பாசஞ்சர் ரெயில் ஒருமுறை ரத்து

சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுவதால் திருவாரூர்-மயிலாதுறை பாசஞ்சர் ரெயில் ஒரு முறை ரத்து செய்யப்படுகிறது. இதனால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

Update: 2021-08-31 18:02 GMT
திருவாரூர்,

கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் ரெயில் போக்குவரத்து படிப்படியாக இயக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு திருவாரூர்-காரைக்குடி, திருவாரூர்-மயிலாடுதுறை ஆகிய வழித்தடத்தில் பாசஞ்சர் ரெயில்கள் இயக்கப்பட்டன. இந்தநிலையில் கடந்த 4-ந்தேதி முதல் திருவாரூர்-காரைக்குடி இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. சிறப்பு ரெயிலில் எக்ஸ்பிரஸ் கட்டணம் வசூலிக்கப்படுவதால் ரூ.35 என்ற டிக்கெட் கட்டணம் ரூ.60 ஆக உயர்ந்தது.

இந்்தநிலையில் திருவாரூர்-மயிலாடுதுறை ரெயில் போக்குவரத்து தொடங்கும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது. அதன்படி நேற்று முதல் மயிலாடுதுறை-திருவாரூர் ரெயில் போக்குவரத்து தொடங்கியது.

இதில் திருவாரூர்-காரைக்குடி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயிலை நீட்டிப்பு செய்து மயிலாடுதுறையில் இருந்து இயக்கப்படுகிறது. இதனால் காலை 6.45 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து புறப்பட்டு திருவாரூருக்கு 7.45 மணிக்கு வந்தடைகிறது..

திருவாரூர்-காரைக்குடி

பின்னர் திருவாரூரில் இருந்து 8.15 மணிக்கு காரைக்குடி புறப்படுகிறது. மறுமார்க்கமாக காரைக்குடியில் மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு இரவு 8.10 மணிக்கு திருவாரூர் வருகிறது. பின்னர் திருவாரூரில் இருந்து இரவு 8.15 மணிக்கு புறப்பட்டு 9 மணிக்கு மயிலாடுதுறை செல்கிறது.

இதனால் இந்த ரெயில் இரு எண்கள் கொண்டு செயல்படுகிறது. பழைய முறையில் மயிலாடுதுறை-திருவாரூர் வழித்தடத்தில் காலை ஒரு முறையும், இரவு ஒரு முறையும் இயக்கப்பட்டது.

இதனால் திருவாரூர் பகுதியில் இருந்து மயிலாடுதுறை மார்க்கத்தில் வேலைக்கு செல்பவர்கள் இந்த ரெயிலை முழுமையாக பயன்படுத்தி வந்தனர்.

ஆனால் தற்போது சிறப்பு ரெயிலாக இயக்கப்படுவதால் மயிலாடுதுறையில் புறப்பட்டு காரைக்குடி சென்று மீண்டும் இரவு மயிலாடுதுறை சென்று அடைகிறது.

பயணிகள் அவதி

இதனால் மயிலாடுதுறை-திருவாரூர் ரெயில் போக்குவரத்து ஒரு முறை ரத்தாகிறது. இதன் காரணமாக வேலைக்கு செல்லும் அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர்.

திருவாரூர்-காரைக்குடி சிறப்பு ரெயில் என்ஜின் டிரைவர்கள், கார்டு என பணி புரிபவர்கள் ஓய்வு அறை உள்ளிட்ட வசதிகள் மயிலாடுதுறை ெரயில் நிலையத்தில் உள்ளதால் இந்த ரெயில் மயிலாடுதுறை வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

பாசஞ்சர் ரெயில் சிறப்பு ரெயிலாக எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் பணம் வசூலிப்பதாலும், மயிலாடுதுறை- திருவாரூர் ரெயில் போக்குவரத்து ஒரு முறை ரத்தாவதாலும் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

மாணவர்களுக்கு வசதி

இதுகுறித்து திருவாரூர் மாவட்ட ெரயில் உபயோகிப்போர் சங்க பொதுச்செயலாளர் பாஸ்கரன் கூறுகையில்:-

திருவாரூர்-மயிலாடுதுறைக்கு காலை ரெயில் போக்குவரத்து ரத்தாகிறது. இந்த ரெயில்கள் மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்லும் பயணிகளுக்கும் வசதியாக இருந்தன. இந்தநிலையில் நாளை(புதன்கிழமை) முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் நிலையில் அனைவரின் நலன் கருதி முன்பு போல் காலை வேளையில் திருவாரூர்-மயிலாடுதுறை ரெயிலை இயக்கிட வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்