மாணவர்களை ஏற்றி சென்ற பள்ளி, கல்லூரி வாகனங்களில் அதிகாரிகள் சோதனை

திருச்செங்கோட்டில் மாணவர்களை ஏற்றி சென்ற பள்ளி, கல்லூரி வாகனங்களில் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை செய்தனர்.

Update: 2021-09-01 18:59 GMT
எலச்சிபாளையம்:
வாகனங்களில் சோதனை
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து நேற்று பள்ளி, கல்லூரிகள் 5 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டன. மாணவர்களை ஏற்றி செல்லும் வாகனங்களில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும் என்று பள்ளி, கல்லூரி நிர்வாகங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. 
இந்தநிலையில் திருச்செங்கோட்டில் ஈரோடு செல்லும் சாலையில் வட்டார போக்குவரத்து அலுவலர் மாதேஸ்வரன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் பாமப்பிரியா மற்றும் போக்குவரத்துத்துறை அலுவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அந்த வழியாக வந்த பள்ளி, கல்லூரி வாகனங்களை நிறுத்தி திடீரென சோதனை செய்தனர். 
அறிவுறுத்தல்
மேலும் வாகனத்தில் அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என பார்வையிட்டனர். தொடர்ந்து வாகன பராமரிப்பு, அவசரகால வழி, முதலுதவி பெட்டி, கிருமி நாசினி வைக்கப்பட்டுள்ளதா? என்றும் ஆய்வு செய்தனர். 
இதையடுத்து வாகனத்தில் பயணம் செய்யும் மாணவ, மாணவிகள் உள்பட அனைவரும் கட்டாயம் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், முககவசம் அணிந்து வருபவர்களை மட்டுமே வாகனத்தில் ஏற அனுமதிக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

மேலும் செய்திகள்