கள்ளக்குறிச்சி ராஜா நகர் பூங்காவில் ரூ.20 லட்சத்தில் யோகா மையம், உடற்பயிற்சி கூடம்

கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு

Update: 2021-09-02 16:33 GMT
கள்ளக்குறிச்சி, 
கள்ளக்குறிச்சி ராஜா நகர் சிறுவர் பூங்காவில் ரூ.20 லட்சம் செலவில் புதிதாக யோகா மையம் மற்றும் உடற்பயிற்சி மையம் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நேற்று காலை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அவர் யோகா மையம், உடற்பயிற்சி கூடத்தில் உபகரணங்கள் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டதோடு, அங்குள்ள கழிப்பறைகளை சுத்தமாக தினமும் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி அதிகாரிகளை அறிவுறுத்தினார். 
அதைத்தொடர்ந்து கலெக்டர் ஸ்ரீதர், துருகம் சாலையில் உள்ள நகராட்சி மயானத்தின் வெளிப்புறம் அமைக்கப்பட்டு வரும் சாலையோர பூங்கா பணிகளை ஆய்வு செய்ததோடு, இறுதிசடங்கு செய்ய வரும் பொதுமக்களுக்கு தேவையான தண்ணிர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்துமாறும், கள்ளக்குறிச்சி நகர பகுதிகளில் நடைபயிற்சியுடன் கூடிய பூங்காக்கள் அதிகமாக அமைக்க வேண்டும் எனவும் நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது நகராட்சி ஆணையாளர் குமரன், நகராட்சி பொறியாளர் பாரதி, துப்புரவு ஆய்வாளர் செல்வகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்