வடமாநில வாலிபருக்கு அரிவாள் வெட்டு; தொழிலாளி கைது

புகளூர் அருகே வடமாநில வாலிபரை அரிவாளால் வெட்டிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-09-02 18:35 GMT
நொய்யல், 
ஏற்றுமதி நிறுவனம்
கரூர் மாவட்டம் புன்செய் புகளூர் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 38). இவர் கரூர் பகுதியில் உள்ள ஒரு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து  வருகிறார். இவரது மனைவி வனிதா. இவர் அப்பகுதியில் உள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
இந்தநிலையில் அங்கு பணிபுரியும் வடமாநில வாலிபர் ஒருவருடன் வனிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த ரவிச்சந்திரன் அந்த வடமாநில வாலிபரை தேடி அந்த நிறுவனத்திற்கு சென்றார்.
அரிவாள் வெட்டு
பீகார் மாநிலத்தை சேர்ந்த சோஷித்குமார் (19) மற்றும் அவரது நண்பர்கள் அங்குள்ள அறையில் படுத்து இருந்தனர். அப்போது அங்கு வந்த ரவிச்சந்திரன், தனது மனைவியிடம் பழகி வரும் அந்த வாலிபரை கூப்பிடுமாறு கூறினார். இதில் அவர்கள் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.இதில் ஆத்திரம் அடைந்த ரவிச்சந்திரன் தான் கொண்டு வந்த அரிவாளால் சோஷித்குமாரை வெட்டியுள்ளார். பின்னர் அவர் அங்கிருந்து சென்றுவிட்டார்.
கைது
இதில், பலத்த காயமடைந்த சோஷித்குமாரை சக ஊழியர்கள் மீட்டு கரூரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
இந்த சம்பவம் குறித்து வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வழக்குப்பதிவு செய்து ரவிச்சந்திரனை கைது செய்தார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்