கீரமங்கலத்தில் ரூ.3½ லட்சம் லாட்டரி சீட்டுகள் பறிமுதல்; ஒருவர் கைது

ரூ.3½ லட்சம் லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்து ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-09-04 18:55 GMT
கீரமங்கலம்:
கீரமங்கலம் மேற்கு பகுதியில் ஒரு வீட்டில் லாட்டரி சீட்டுகள் பதுக்கி வைத்திருப்பதாக கீரமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்து. இதையடுத்து தலைமை காவலர் ஹரிகிருஷ்ணன் மற்றும் தனிப்பிரிவு போலீசார் இசக்கியா ஆகியோர் அந்த வீட்டிற்குச் சென்ற போது ஒருவர் பெரிய பை ஒன்றை தூக்கிக் கொண்டு ஓடினார். பின்னர் அவரை மடக்கி பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் செரியலூர் இனாம் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 33) என்பது தெரியவந்தது. அவர் பையில் இருந்த 6-ந் தேதிக்கு பிறகு 12-ந் தேதி வரை தேதியிட்ட ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 3 ஆயிரத்து 350 லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். மேலும் சுரேஷ்குமார் கடந்த மாதமும் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட நபர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சுரேஷ்குமார் அறந்தாங்கி பகுதியிலிருந்து மொத்தமாக லாட்டரி சீட்டுகளை வாங்கி புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சில்லறை வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதும் தெரிய வந்துள்ளது. 

மேலும் செய்திகள்