கடன்தகராறில் தொழிலாளிக்கு கத்திவெட்டு

ஆரணி அருகே கடன்தகராறில் தொழிலாளியை கத்தியால் வெட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-09-05 11:31 GMT
ஆரணி

ஆரணி அருகே கடன்தகராறில் தொழிலாளியை கத்தியால் வெட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த துந்தரீகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பட்டு நெசவு தொழிலாளி தங்கராஜ். 

இவர் ஆரணி அருணகிரி சத்திரம் பகுதியைச் சேர்ந்த சோழபாண்டி என்பவரிடம் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த பணத்தை அவர் திருப்பி கொடுக்கவில்லை. இந்த நிலையில் சோழபாண்டி தனது நண்பர்களான சென்னையை சேர்ந்த கோபிநாத், ராஜா ஆகியோருடன் கடந்த 30-ந் தேதி தங்கராஜிடம் கொடுத்த பணத்தை வாங்க துந்தரீகம்பட்டு கிராமத்திற்கு சென்றனர். பின்னர் அனைவரும் நெசல் பகுதியில் மது அருந்தி உள்ளனர். 

அப்போது சோழபாண்டி, தான்கொடுத்த பணத்தை தங்கராஜிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் நீங்கள் கொடுத்த பணத்தை எனது நண்பர் ரவியிடம் கொடுத்து உள்ளேன் என கூறியுள்ளார். 

இதையடுத்து நெசவுத் தொழிலாளியான ரவியை அங்கு வரவழைத்து அவருக்கும் மது வாங்கி கொடுத்துள்ளனர். பின்னர் சோழபாண்டி, தங்கராஜ் உள்பட 4 பேரும் சேர்ந்து ரவியை அடித்து உதைத்து, கத்தியால் தலை, கழுத்து, கை ஆகிய பகுதிகளில் வெட்டியதாக கூறப்படுகிறது. 

இதில் படுகாயமடைந்த ரவி வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசில் ரவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சோழபாண்டி, கோபிநாத், ராஜா ஆகிய 3 பேரை கைது செய்தனர். 

தலைமறைவாக உள்ள தங்கராஜை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்