நாட்டின் பொது சொத்துக்களை விற்பதை கண்டித்து துறைமுக தொழிற்சங்கங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

துறைமுக தொழிற்சங்கங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Update: 2021-09-05 15:18 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் பொதுச்சொத்துக்களை மத்திய அரசு விற்பனை செய்வதை கண்டித்து துறைமுக தொழிற்சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
இந்திய பெருந் துறைமுகங்களில் இயங்கி வரும் 5 பெரிய சம்மேளன தலைவர்கள் கூட்டம் தூத்துக்குடியில் கடந்த 3, 4 தேதிகளில் நடந்தது. இதில் நாடு முழுவதும் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் நேற்று வ.உ.சி 150-வது பிறந்த நாளை முன்னிட்டு இந்த 5 பெரிய சம்மேளனங்கள் சார்பில் நாட்டின் பொது சொத்துகளை ஏலமிட்டு விற்பனை செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும். தொழிலாளர்களுக்கு விரோதமான தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெற வேண்டும். விவசாயிகள் விரோத வேளாண் திருத்தச் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பழைய துறைமுகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
கலந்து கொண்டவர்கள்
ஆர்ப்பாட்டத்துக்கு தேசிய போர்ட் அன்ட் டாக் ஒர்க்கர்ஸ் பெடரேசனின் (ஐ.என்.டி.யு.சி) அகில இந்திய தலைவரான முன்னாள் எம்பி சமந்த் ராய் தலைமை தாங்கினார். அகில இந்திய போர்ட் அன்ட் டாக் ஒர்க்கர்ஸ் பெடரேசன் (எச்.எம்.எஸ்) பொதுச்செயலானர் முகமது ஹனீப், அகில இந்திய நீர்வழி போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சி.ஐ.டி.யு) தலைவர் சி.டி.நந்தகுமார், பொதுச் செயலானார் நரேந்திர ராவ், தேசிய போர்ட் அன்ட் டாக் ஒர்க்கர்ஸ் பெடரேசன் சார்பில் பி.கதிர்வேல், அகில இந்திய போர்ட் அன்ட் டாக் ஒர்க்கர்ஸ் பெடரேசன் (ஒர்க்கர்ஸ்) பொதுச் செயலாளர் வி.வி.ரானே, வாட்டர் பிரண்ட் ஒர்க்கர்ஸ் பெடரேசன் (ஏ.ஐ.டி.யு.சி) தலைவர் சரவணன், துறைமுக லேபர் டிரஸ்டிகள் ஆர்.ரசல், சங்கரலிங்கம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
தூத்துக்குடி துறைமுக ஜனநாயக ஊழியர் சங்க தலைவர் எஸ்.பாலகிருஷ்ணன், பொதுச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, போர்ட் எம்பிளாயிஸ் டிரேடு யூனியன் சார்பில் கனகராஜ், முருகன், போர்ட் மெரைனர்ஸ் அன்ட் ஜெனரல் ஸ்டாப் யூனியன் பொதுச் செயலாளர் துறைமுகம் சத்யா, சுரேஷ், நேசனல் ஹார்பர் ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பில் ராஜகோபாலன், சந்திரசேகர், போர்ட் யுனைடெட் ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பில் ஜான் கென்னடி, கிளிங்டன், வ.உ.சி போர்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பில் பாலசிங்கம், பாண்டி, ஜெனரல் ஸ்டாப் யூனியன் சார்பில் ஆரோக்கியசாமி, பிரவின், வ.உ.சி போர்ட் பென்சனர்ஸ் அசோசியேசன் சார்பில் டாக்டர் சிவனாகரன், சிந்தா துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்