கிராம உதவியாளர் பணியிடை நீக்கம்

லஞ்சம் வாங்கிய வீடியோ எதிரொலியாக கிராம உதவியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

Update: 2021-09-07 18:52 GMT
தேவகோட்டை,
தேவகோட்டை அருகே உள்ள மஞ்சனி கிராமத்தை சேர்ந்த ராசு (வயது 63) கடந்த 6 மாதத்திற்கு முன்பு பாம்பு கடித்து இறந்து விட்டார்.இவருக்கு 2 மகன்களும் 2 மகள்களும் உள்ளனர். ராசு பெயரில் இருந்த சொத்துக்களை தங்களது வாரிசுகளுக்கு மாற்றக் கோரி அவரது மகன் செந்தில்வேல் (29) மாவிடுதிக்கோட்டை கிராம நிர்வாக அதிகாரி தேவி மற்றும் கிராம உதவியாளர் ஜெயகோபி ஆகியோரை பலமுறை அணுகினார். பட்டா மாறுதல் செய்து கொடுப்பதில் காலதாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் செந்தில்வேல் கிராம நிர்வாக அதிகாரி தங்கியிருந்த அறைக்குச் சென்று தனது தந்தை பெயரில் உள்ள சொத்துக்களை பட்டா மாறுதல் செய்ய கோரி கிராம நிர்வாக அதிகாரி மற்றும் கிராம உதவியாளர் ஆகியோருக்கு லஞ்சம் கொடுப்பது போன்ற வீடியோ வைரலானது.இதுபற்றி சிவகங்கை கலெக்டர் மதுசூதனன்ரெட்டி உத்தரவின் பேரில் தேவகோட்டை கோட்டாட்சியர் பிரபாகரன் விசாரணை நடத்தினார். இந்த விசாரணையைத் தொடர்ந்து கிராம உதவியாளர் ஜெய கோபியை நேற்று தாசில்தார் அந்தோணிராஜ் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். கிராம நிர்வாக அதிகாரி தேவி மீது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்