தீப்பெட்டி கழிவுகளை ஏற்றி வந்த சரக்கு வாகனத்தில் தீ

சிவகாசியில் தீப்பெட்டி கழிவுகளை ஏற்றி வந்த சரக்கு வாகனத்தில் தீப்பிடித்தது.

Update: 2021-09-07 21:24 GMT
சிவகாசி, 
கோவில்பட்டியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 34). இவர் நேற்று கோவில்பட்டியில் இருந்து தனக்கு சொந்தமான சரக்கு வாகனத்தில் தீப்பெட்டி கழிவுகளை சிவகாசிக்கு கொண்டு வந்தார். சிவகாசி பன்னீர் தெப்பம் அருகில் வரும் போது திடீரென சரக்குவாகனத்தில் இருந்து புகை வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சாலையில் சென்றவர்கள் சத்தம் போட்டு சரக்குவாகனத்தை நிறுத்தி உள்ளனர். பின்னர் வாகனத்தில் எரிந்த தீயை அணைக்க முயன்ற போது மள, மளவென தீ பரவியது. இதை தொடர்ந்து சிவகாசி தீயணைப்பு நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் நிலைய அலுவலர் பாலமுருகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். அதற்குள் சரக்கு வாகனம்  தீயில் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்